Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உங்கள் மேல் மரியாதை அப்படியே இருக்கும்: சோனியாவுக்கு குஷ்பு உருக்கமான கடிதம் 

அக்டோபர் 12, 2020 12:36

புதுடெல்லி: உங்கள் மேல் உள்ள மரியாதை அப்படியே இருக்கும்,''  என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து குஷ்பு விலகுவதாக சோனியா காந்திக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து நடிகை குஷ்பு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: தேசிய செய்தித் தொடர்பாளராக பதவி கொடுத்து இந்த தேசத்திற்கு சேவையாற்ற வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி. மிகவும் கடினமான சூழல்களில் கூட பல்வேறு தளங்களில் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமிதம் அடைகிறேன். 

கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த போது இங்கு வந்து இணைந்தேன். நான் பெயருக்காகவோ புகழுக்காகவோ பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவோ காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகவில்லை. என்னை போன்று கடுமையாக உழைத்தவர்களை உயர் பதவியில் இருக்கும் சிலர், கள நிலவரம் அறியாதவர்கள், மக்களிடம் பிரபலமடையாதவர்கள் சிலர் ஒடுக்குகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன். நீண்ட யோசனைக்கு பிறகே நான் இந்த முடிவை எடுத்தேன். ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுக்கு நன்றி. உங்கள் (சோனியா) மீதான மதிப்பும் மரியாதையும் எப்போதும் அப்படியே இருக்கும்.
இவ்வாறு குஷ்பு தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

நடிகை குஷ்பு கடந்த 2010ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் 2011ம் ஆண்டு ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் தமிழகத்தில் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் கட்சியில் நிர்வாகிகளுக்கும் குஷ்புவுக்கும் இடையே பிரச்சினை காரணமாக அவர் அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் 2014ம் ஆண்டு இணைந்தார். தனது குடும்பமே பாரம்பரிய காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் தான் தற்போது தாய் வீட்டுக்கு வந்ததை போல உணர்கிறேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அண்மைக்காலமாக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் குஷ்புவுக்கும் இடையே பனிப்போர் இருந்தது. இதனால் அவர் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து குஷ்பு விலகுவதாக கூறி தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்